Saturday, October 16, 2010

கடந்து செல்லும் அதிகாரம்: பௌதீக உடல் - சமூக உடல் - தலித் உடல் தேன்மொழி

கடந்து செல்லும் அதிகாரம்:
பௌதீக உடல் - சமூக உடல் - தலித் உடல்
தேன்மொழி

முன்னுரை :
    நம் காலத்திய பிரச்சனைகள் எல்லாவற்றையுமே ஒருவிதத்தில் அதிகாரம் குறித்த பிரச்சனைகள் என்று நாம் சுருக்கமாகக் கூறிவிட முடியும். வாழ்வின் அனைத்துக் கூறுகளிலும் பரவி நின்று நம்மை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது அதிகாரம். அதிகாரம் ஒரு புள்ளியிலிருந்து புறப்படுகிறது என்ற கருத்து இப்போது கேள்விக்குள்ளாகியிருக்கிறது. அதிலிருந்து விடுபட்ட நிலை என ஏதும் இருக்க முடியாது என்பதே இன்று நாம் வந்தடைந்திருக்கிற புரிதல். இந்தச் சூழ்நிலையில் விடுதலை, சுதந்திரம் என்பவற்றின் பொருள் என்னவாக இருக்கும் என்ற கேள்வி நம்முன் எழுகிறது. அதிகார சமன்பாடுகளை மாற்றி அமைப்பது மட்டுமே இன்றைக்கு சாத்தியம் என்னும் நிலையில் அதிகாரமற்ற நிலையைக் கற்பனை செய்து கொண்ட தத்துவங்கள் யாவும் இன்று வழக்கொழிந்தவையாக மாறிவருகின்றன. இது ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ள அனைவருமே கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாக இருக்கிறது. அதிகாரத்தை எதிர்த்துப் போராடும் மற்ற பிரிவினர் இந்த உண்மையை எப்படிப் புரிந்துகொண்டாலும் இந்தியச் சூழலில் சாதியக் கருத்தியலின் விளிப்புக்கு ஆட்பட்டு தன்னிலைகளாகக் கட்டமைக்கப்பட்டிருப்பவர்கள் குறிப்பாக ஒரு தலித்தாகவும் பெண்ணாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுபவர்கள் இந்த சிக்கலை மிகுந்த அக்கறையோடு அணுகவேண்டியிருக்கிறது.
அதிகாரத்தின் வேறுபட்ட வடிவங்கள்:
 அதிகாரத்தின் உற்பத்தியும் பரவலும் பல்வேறுபட்ட நிலைகளில் தன்மைகளில் நடக்கிறது. அதைப்போலவே அதை எதிர்த்த போராட்டங்களும் எத்தனையோ விதங்களில் வெளிப்பாடு கொள்கின்றன. சமூகத்தில் நடைபெறும் போராட்டங்கள் அனைத்தையும் ஒரு வசதி கருதி நாம் மூன்று வகைமைகளின்கீழ் அடக்கலாம். அ.. மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள். ஆ. பொருளாதார சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள் இ. தனி மனிதர்களைத் தாம் விரும்பும் தன்னிலைகளாக மாற்றி அடிமைப்படுத்தி வைக்க விரும்பும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டங்கள் எனப் பரந்த பொருளில் இப்படி மூன்றாக நாம் வகைப் படுத்திக்கொள்ளலாம்.
      அ. மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள்:
உலகில் இனங்களின் அடிப்படையிலும், மதங்களின் அடிப்படையிலும், மொழிகளின் அடிப்படையிலும் மனிதன் பிரிந்து கிடக்கின்றான். இந்தப் பிரிவினைகள் மனிதர்கள் தாமே விரும்பி ஏற்படுத்திக் கொண்டவை எனக் கூற முடியாது. மனிதகுல வரலாற்றில் மாறி வந்திருக்கும் பல்வேறு கட்டங்களில் மனிதர்கள் தவிர்க்க முடியாமல் இத்தகைய அடையாளங்களை சுமக்க வேண்டியவர்களாகிவிட்டனர். ஒரு கட்டத்தில் மனிதன் தனது பாதுகாப்புக்கென உருவாக்கிக் கொண்ட இந்த அடையாளங்கள் பின்னர் அவனுக்கு சுமையாகவும் விலங்காகவும் மாறிவிட்டன. முதலில் அடையாளங்களை அவன் பயன்படுத்தினான். பிறகோ அடையாளங்கள் அவனைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. மொழி அடையாளமாக இருந்தாலும், இன அடையாளமாக இருந்தாலும், மத அடையாளமாக இருந்தாலும் அதைக் கட்டுப்படுத்துகிற ஆற்றல் இப்போது மனிதனுக்கில்லை. அந்த அடையாளங்களின் கைதியாக அவன் மாறிவிட்டான்.
கூட்டுணர்வு கருதியும் பாதுகாப்புக்காகவும் ஒரு அடையாளத்தை ஏற்றுக்கொண்ட ஒரு சமூகக் குழு அதனால் கிடைக்கும் அதிகாரத்தை சுவைத்தபின் அதையே தனது ஆதிக்கக் கருவியாக மாற்றுகிறது. இன்னொரு அடையாளத்தை ஏற்றுக்கொண்டுள்ள சமூகக் குழுவை மேலாதிக்கம் செய்ய அது முனைகிறது. அந்த அதிகாரப் போட்டி பல சமயங்களில் ரத்தம் பெருக்கெடுக்கும் யுத்தங்களாக வெளிப்பட்டதை வரலாறு நெடுக நாம் பார்க்க முடிகிறது. அந்த சமரில்  தோல்வி அடைந்த சமூகக் குழுக்கள் அடிமைப்பட்ட நிலையில் கிடந்து உழல நேர்ந்ததை நாம் அறிவோம். அடையாளங்களின் வழியே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆதிக்கத்தை அதேவிதமாக எதிர்கொள்ளவே மனித குலம் சபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அடிமைத்தளையிலிருந்து விடுபட யத்தனிக்கும் சமூகக் குழுக்களும் அடையாளங்களின் வழியே தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அண்மைக்கால வரலாற்றை எடுத்துப் பார்த்தால் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய அடையாளங்களை அடிப்படையாகக்கொண்ட ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களே உலகில் நடந்துவருவதை நாம் உணரலாம். அரசியல் மொழியில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் எனக் குறிக்கப்படும் இந்த வகையான போராட்டங்கள் குறிப்பாக ஆப்ரிக்க நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் வெளிப்பாடுகொண்டன.

       ஆ. பொருளாதார சுரண்டல்களுக்கு எதிரான போராட்டங்கள்:
ஒரு தனி மனிதனை அவன் உற்பத்தி செய்யும் பொருளிலிருந்து பிரிக்கும் சுரண்டல் வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் என இவற்றை நாம் குறிப்பிடலாம். வரலாற்றில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களையவேண்டும் எனப் பல்வேறு சிந்தனையாளர்களும் பலவிதமான முன்மொழிவுகளைக் கூறியுள்ளபோதிலும் கார்ல் மார்க்ஸின்(1818----& 1883) தத்துவமே இதில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  ரஷ்யாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், சீனாவிலும், வியட்நாமிலும் இப்படியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதை நாம் வரலாற்றில் பார்த்தோம். அதிகாரம் என்பது அரசில் தங்கியிருக்கிறது என நம்பிய இந்தத் தத்துவம் அரசை கைப்பற்றுவதன்மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டுவிட முடியும் எனக் கூறியது. உற்பத்தி சக்திகள் உற்பத்தி உறவுகள் ஆகியவை எவ்வாறு அதிகாரத்தோடு பின்னிப் பினந்திருக்கின்றன என்பதையும் அது எடுத்துக்காட்டியது. லாபம் என்பது உபரிமதிப்பைச் சுரண்டுவதுதான் என விளக்கிய அது முதலாளித்துவமானது அனைத்து உறவுகளையும் லாபத்தை அடிப்படையாகக்கொண்ட சுரண்டல் உறவுகளாக மாற்றிவிட்டதையும் சுட்டிக்காட்டியது. அந்தத் தத்துவத்தின் வெளிச்சத்தில் நடைபெற்ற எண்ணற்ற போராட்டங்களை நாம் இந்த வகைப்பாட்டில் சேர்க்கலாம்.
       இ. தன்னிலையாக்கத்துக்கு எதிரான போராட்டங்கள்:
தன்னிலைத்துவம் என்பதையும் அடையாளம் என்பதையும் நாம் வேறுபடுத்திப் புரிந்துகொள்ளவேண்டும். தனிநபராக இருக்கும் ஒருவரை கருத்தியல்தான் தன்னிலையாக வடிவமைக்கிறது. அடையாளம் என்பதைவிடவும் ஆழமான பொருள் கொண்டது தன்னிலைத்துவம். கருத்தியலின் விளிப்புக்கு ஆட்படும் ஒரு தனிநபர் எப்படி ஒரு தன்னிலையாக உருப்பெறுகிறார் என்பது உற்றுநோக்கத்தக்கதாகும். ஒரு தனி மனிதனை அவனோடு பிணைத்து அவனை அதே விதமாக பிறருக்குக் கீழ்ப்படிய வைக்கும் வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள். இந்தப் போராட்டங்கள் மிகவும் நுட்பமானவை.மற்ற இரு போராட்டங்களை விடவும் வன்மையானவையும்கூட.
அதிகாரம் செயல்பட்ட ஆரம்பப் புள்ளி:
     மேற்சொன்னவாறு போராட்டங்களை நாம் மூன்றாகப் பிரித்துக் கொண்டபோதிலும், அவை யாவும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டவையாகவே இருக்கின்றன. ஒரு நாட்டின் சமூக அரசியல் சூழ்நிலையைப் பொறுத்து இந்த மூன்று விதமான போராட்டங்களில் ஏதோ ஒன்று முன்னிலை பெறுகிறது. தொழில் வளர்ச்சியுற்ற நாடுகளில் முதலாளித்துவத்தின் செயல்பாடுகள் காரணமாக சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் முன்னிலைப்பெறும் என்பதுதான் பொதுவான புரிதலாக இருந்தது. ஆனால், இன்று அப்படியான நாடுகளில் சுரண்டலுக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்கள் தீவிரம் பெறவில்லை. இதற்குக் காரணம் என்ன என்பது சிந்திக்கத்தக்கதாகும். ஆனால், உலகமெங்கும் அடையாளங்களை முன்வைத்து நடத்தப்படுகிற போராட்டங்கள் பல வடிவங்களில் தீவிரம் பெற்றிருக்கின்றன. ஒரு சில நாடுகளில் இனரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள். சில நாடுகளிலோ நிற வேற்றுமைக்கு எதிரான கிளர்ச்சிகள் எழுச்சிப் பெற்று வருகின்றன. இன்னும் சில நாடுகளில் இத்தகைய போராட்டங்கள் மத அடையாளங்களைப் பெற்றுள்ளதை நாம் காணமுடிகிறது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் தன்னிலையாக்க வடிவங்களுக்கு எதிரான போராட்டங்கள் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இந்த போராட்டங்களுக்கான அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவேண்டுமெனில் அதிகாரம் செயல்படும் சூட்சுமங்களை நாம் அறிந்துகொண்டாகவேண்டும்.
     அதிகாரமென்பது ஏதுமற்ற வெளியில் செயல்படவில்லை. அது முதன்மையாக மனித உடலையே தனது வினைக்கான களமாகக் கொள்கிறது. மனிதர்களற்ற வெளிகளிலும் அதிகாரத்தின் செயல்பாடுகள் நிகழ்கின்றன என்ற போதிலும் அது பருண்மையாக வெளிப்பட மனித உடல் தேவை. மனிதர்கள் பிம்பங்களாகவும் குறியீடுகளாகவும் பெருக்கப்படுவதற்கு  முன்பே மனிதனின் பௌதீக உடலைத் தான் தனது செயல்பாட்டுக்கான துவக்கப்புள்ளியாக அதிகாரம் தெரிவுசெய்துகொண்டது. மனித உயிரிகள்  விலங்குகளின் வெற்றுப் பிரதிகளாக இருந்த நிலையிலிருந்து மாறி குழுவாக உயிர்த்திருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது அதிகாரம் தன்னை எழுதிக்கொள்ள அவர்களின் உடல்களைத்தான் காகிதமாக்கிக்கொண்டது. அதிலிருந்துதான் அது ஆதிக்கமாக விரிவுபெற்றது. பௌதீக உடலை சமூக உடலாகக் கட்டமைத்ததென்பது இந்த நிகழ்வுப்போக்கின் ஒரு முக்கியமான தருணமாகும்.
பௌதீக உடலும் சமூக உடலும் :
ஒரு சிசு இந்த உலகில் ஜனிக்கும்போது அது எந்த அடையாளமும், அதிகாரமும் அற்றதாகவே பிறக்கிறது. ஆனால் அது இந்த பௌதீக உலகோடு தனது முதல் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும்போதே அதன்மீது அடையாளங்களும் அதன் அடிப்படையிலான அதிகாரமும் படிந்துவிடுகின்றன. ஒருவிதத்தில் பார்த்தால் தூய்மையான & அடையாளமற்ற, அதிகாரமற்ற நிலையை ஒரு மனித உயிரி ஒருபோதும் கொண்டிருப்பதில்லை என்றே சொல்லலாம். ஸ்தூலமான உடலின்மீது அடையாளங்களும் அவற்றின் வழியிலான அதிகாரமும் ஏற்றப்படும்போது உடல் என்பது அதிகாரப் போட்டிக்கான களமாகிவிடுகிறது. உடலைக் கட்டுப்படுத்துவது, பலியிடுவது என்பதன்வழியே ஆதிக்கம் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட நிகழ்வுகள் வரலாறு நெடுக பதிவுகளாய் கிடைக்கின்றன. வேத காலத்தில் யாகங்களின்போது மனிதர்களும் பலியிடப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன. யாகங்களின்போது பலியிடுவதற்கான ஐந்து விதமான விலங்குகளை வேதங்கள் பட்டியலிடுகின்றன. அக்காலத்தில் விலங்குகளை இரண்டுவிதமாகப் பிரித்து வைத்திருந்தனர் எனத் தெரிகிறது. வேட்டையாடுவதன்மூலம் கொல்வதற்கான விலங்குகள் & அவை கொடூரமானவை. யாகங்களின்போது பலியிடுவதன்மூலம் கொல்வதற்கான விலங்குகள் & இவை அந்த அளவுக்கு ஆபத்தானவை அல்ல. இவற்றை அடக்கிப் பயன்படுத்தலாம். இந்த ஐந்துவித விலங்குகளுக்கு அப்பால் மனிதர்களும் பலியிடப்பட்டனர். தொல்லியல் ஆய்வுகளின்போது கண்டறியப்பட்ட யாக குண்டங்கள் சிலவற்றில் மனித எலும்புகள் கிடைத்திருப்பது இதை உறுதிப்படுத்துகிறது. பிற்காலத்தில் மனிதனை யாக குண்டத்தில் பலியிடுவது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக பொன்னாலான மனித உருவத்தை யாக குண்டத்தில் போடுகிற பழக்கம் உருவானதையும் அறிய முடிகிறது.
மனிதர்கள் குழுக்களாக நிலைபெற்று வாழத் தொடங்கிய காலத்திலிருந்தே அக்குழுவைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட தலைவன் அக்குழுவின் பிற உறுப்பினர்களுடைய வாழ்வு மற்றும் மரணத்தின்மீதான அதிகாரம் கொண்டவனாக இருந்தான் என்பதைப் பார்க்கிறோம். உலகெங்கும் இத்தகைய நடைமுறைதான் இருந்திருக்கிறது. குழுவின் தலைவனுக்கு இருந்த உயிரின்மீதான,வாழ்வின்மீதான அதிகாரம் என்பது மரணத்தின் மீதான அதிகாரமாகத்தான் வெளிப்பாடு கொண்டிருக்கிறது. தனது குழுவுக்கு எதிரிகளால் ஆபத்து சூழும்போது குழுவின் உறுப்பினர்களை யுத்ததில் ஈடுபடுத்துகிற அதிகாரம் தலைவனுக்கு இருந்தது. அந்த அதிகாரத்தை செலுத்துவதன்மூலம் அக்குழுவின் உறுப்பினர்களது மரணத்தை மறைமுகமாக அவன் கையாண்டான். இதை இன்னும் நுணுகிப் பார்த்தால் ஒவ்வொரு உயிருமே வாழ்தலுக்கான போராட்டத்தில் அழிப்பதற்கான தந்திரத்தைக் கையாண்டுகொண்டிருப்பதை நாம் உணரமுடியும்.
மனிதர்கள் தம்மை சமூகமாகக் கட்டமைத்துக்கொண்டபிறகு எல்ல உயிர்களையும் அக்குழுவின் தலைவன் சமமாகப் பார்ப்பதாக சொல்லிக்கொண்டாலும் அக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையே ஒரு பாகுபாட்டைக் கடைப்பிடிக்கவேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டது. பலம், பலவீனம் என்பதன் அடிப்படையில் முதலில் உருவான இந்தப் பாகுபாடு பின்னர் வேறு காரணங்களைக்கொண்டு வடிவமைக்கப்பட்டது. அங்குதான் கருத்தியலின் ஆரம்ப விதைகளை நாம் பார்க்கிறோம். குழு உறுப்பினர்களுக்கிடையே சிலரை முக்கியத்துவம் அற்றவர்களாக மாற்றவேண்டியதும் அப்படியானவர்களின் உயிர்களை எளிதாக எடுத்துக்கொள்வதும் இப்படித்தான் நடந்தேறின.காலப்போக்கில் ஒரு குழுவில் அக்குழுவின் உறுப்பினர்கள் மட்டுமின்றி எதிரிகளோடான போரின்போது பிடிக்கப்பட்ட பிற குழுக்களைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றனர். அவர்களை எப்போதும் கண்காணிக்க வேண்டிய தேவை உண்டானது. எதிரிகளைக் கொன்றுவிடும்போது அங்கு மரணத்தின்மீதான் அதிகாரத்தை ஒருவர் உடனடியாக செயல்படுத்திவிடுகிறார். ஆனால் அதே எதிரியை உயிரோடு வைத்துப் பார்த்துக்கொள்ளும்போது அவருக்கு வேறுவிதமான தொழில் நுட்பம் தேவைப்படுகிறது. அங்குதான் கண்காணிப்பும் அதற்கான கட்டமைப்புகள் மட்டுமின்றி கருத்தியலும் தேவைப்படுகின்றன. கொல்லும் அதிகாரத்தைவிட இது மிகவும் சிக்கலான அணுகுமுறைகளை தேவையாக்குகிறது.
ஒரு பௌதீக உடல் சமூக உடலாக மாற்றப்படும்போது குழுவின் நலன் கருதி அதைக் கட்டுப்படுத்திவைத்தால் மட்டும் போதாது அதை உற்பத்தியில் ஈடுபடுத்தவும்வேண்டும். குழுவின் உயிர்த்தலுக்கான உற்பத்தி, குழுவின் பெருக்கத்துக்கான மறு உற்பத்தி என இரண்டு நிலைகளில் அது வினைப்பட்டாகவேண்டும். அதற்கான கருத்தியல் நுட்பங்கள் கண்டறியப்படவேண்டும் என்ற நிலையில் சமூக இயக்கத்துக்கான விதிகள் உருவாக்கப்படவேண்டியது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அந்த விதிகளைக் குழுவின் உறுப்பினர்கள் பின்பற்றியாகவேண்டும் என்பதை கட்டாயமாக்க அவற்றுக்கு ஒரு முக்கியத்துவம் ஏற்றப்பட்டது. அங்குதான் ‘ புனிதம் ‘ என்ற கருத்தாக்கம் தலையெடுக்கிறது.
சமூக உடலைக் கட்டுப்படுத்த மூன்று சூத்திரங்கள்:
இந்து சமூகத்தில் தமது குழுவின் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்துவதற்கென்று உருவாக்கப்பட்ட பல்வேறு பிரதிகளில் மூன்று பிரதிகளை நாம் முக்கியத்துவம் தந்து பார்க்கவேண்டியுள்ளது. அவை இந்து சமூகத்தின் அடிப்படை நியதிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. வாழ்வின் மூன்று முக்கியமான குறிக்கோள்கள் எவையென்பதை இந்து சமூகம் வரையறுத்து வைத்திருக்கிறது. புருஷ & அர்த்தங்கள் என வர்ணிக்கப்படும் அவை இந்து வாழ்வியலின் அனைத்துக்கூறுகளையும் அரவணைத்துக்கொண்டிருக்கின்றன. 1. தர்மம், 2. அர்த்தம், 3. காமம் என்பவையே அந்த மூன்று சூத்திரங்கள்.
 
   1. தர்மம்:
தர்மம் என்பது கடமை, மதம், மதம் சார்ந்த பணிகள், தார்மீகக் கடமைகள், சமூக மற்றும் சமயம் சார்ந்த நியதிகள், சட்டங்கள், நீதிநெறிகள் என்பனபோன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. தர்மம் என்ற சொல்லின் மூலமாகக் கருதப்படும் ‘ த்ரி ‘ என்பதற்கு பாதுகாத்தல் என்று பொருள். சமூகம் எப்படி இயங்குகிறது என்பதை விளக்குவதாக மட்டுமின்றி அது எப்படி இயங்கவேண்டும் என்பதை வரையறுப்பதாகவும் ‘ தர்மம்‘ இருக்கிறது. இதை எடுத்தியம்பிய தொன்மைக்கால பிரதிகளென ‘ தர்மசூத்திரங்களை ‘ நாம் குறிப்பிடலாம்.  கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.பி முதலாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தப் பிரதிகள் உருவாக்கப்பட்டிருக்கவேண்டும் என நம்பப்படுகிறது. அவற்றுக்குப் பிறகு உருவானவையே தர்ம சாஸ்திரங்கள். தர்ம சாஸ்திரங்களில் முக்கியமானது ‘ மனு தர்ம சாஸ்திரம் ‘ ஆகும். கி.பி முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படும் மனு தர்ம சாஸ்திரம் 2685 பாடல்களின்மூலமாக உடல் குறித்த கருத்துகளையும், அரசியல், சட்டம், நீதி, சாதி, முதலானவைபற்றிய கருத்துகளையும் பேசுகிரது. அதுமட்டுமின்றி புனிதம், தீட்டு, பொருளை அடைவதற்கான வழிகள், அதைப் பராமரிப்பதற்கான முறைகள் போன்றவற்றையும் எடுத்துரைக்கிறது. அண்மைக்க்காலம் வரை பல்வேறு அரசுகளின் அடிப்படை கோட்பாடாக மனுதர்ம சாஸ்திரமே இருந்துவந்தது. வேறுவிதமான ஆட்சிமுறையை ஏற்றுக்கொண்டுவிட்ட இன்றைய நிலையிலும்கூட அதன் செல்வாக்கிலிருந்து நாம் முற்றாக விடுபட்டுவிடவில்லையென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
   2. அர்த்தம்:
அர்த்த என்பதற்கு செல்வம் , அரசியல் அதிகாரம், வெற்றி என பல பொருள்கள் உண்டு. சந்திரகுப்த மௌரியரின் அரசவையில் அமைச்சராக இருந்த கௌடில்யர் என்பவரால் இயற்றப்பட்டதெனக் கூறப்ப்டும் ‘ அர்த்த சாஸ்திரம் ‘ இதற்கான அடிப்படை நூலாகக் கருதப்படுகிறது. ஒரு மன்னன் எப்படி அரசாள வேண்டும் என்பதற்கான அடிப்படைகளை இந்த நூல் வகுத்துத் தந்திருப்பதாக சொல்லப்பட்டபோதிலும் இது பெரும்பாலும் மனிதர்களின் மனோவியல் குறித்தும் அதை எவ்வாறு தமக்கேற்றபடி ஒரு அரசன் கையாளலாம் என்பது குறித்தும்தான் அதிகம் பேசுகிறது. மக்களிடையே இருக்கும் கடவுள் நம்பிக்கையை எப்படியெல்லாம் அரசன் தனக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளலாம் என இந்நூலில் பேசப்பட்டுள்ளது. கடவுளர்போல் வேடம் தரித்தவர்களோடு மன்னன் வீதியுலா செல்லவேண்டுமென்றும், சிலரது மரணத்தை முன்யூகித்துச் சொல்வதுபோல் சொல்லி அந்த நபர்களைக் கொன்றுவிடுவதன்மூலம் மன்னனுக்கு எதிர்காலத்தைக் கணித்துச்சொல்லும் ஆற்றல் இருக்கிறது என மக்களை நம்பவைக்கவேண்டுமென்றும் இந்த நூல் கூறுகிறது. பொய்களைப் பரப்புதல், வதந்திகளைப் பரவச் செய்தல் போன்றவற்றின்மூலமாக ஆட்சியாளர்கள் எப்படியெல்லாம் பயன்பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்குகிறது.
   3. காமம்:
காமம் என்பது பாலியல் சார்ந்த விருப்பத்தை மட்டும் குறிப்பதல்ல. இன்பம், இச்சை என்பவற்றைக் குறிப்பதாக இந்த சொல் இருந்தாலும் புலனின்பங்கள் யாவற்றையும் உள்ளடக்கியே இது கையாளப்படுகிறது. இசை, ஓவியம், இன்சுவை உணவு உள்ளிட்ட ந்ண்கலைகள் யாவும் இதற்குள் அடக்கம். இதற்கான சூத்திரத்தை எழுதியவர் கி.பி மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரெனக் கருதப்படும் வாத்சயாயனர் என்பவராவார். தனிமனிதர்கள் பின்பற்றவேண்டிய கடமைகளை இந்நூல் எடுத்துக்கூறுகிறது என்றபோதிலும் அவற்றை சமூகத்தின்மீதும் ஏற்றிப் பார்க்கமுடியும்.
 மேற்குறிப்பிட்ட மூன்று அம்சங்களையும் ஒன்றோடொன்று பிணைந்த நிலையிலேயே இந்து சமூகம் புரிந்துகொண்டுள்ளது. இவற்றுள் ஒன்றை மறுத்து இன்னொன்றை முக்கியத்துவப்படுத்த முடியாது என்பதே அதன் அணுகுமுறையாகும். இந்து சமூகத்தின் நிலை இப்படி இருந்ததெனில் மேற்கத்திய சமூகங்களும் இதேவிதமான அணுகுமுறைகளையே கைக்கொண்டிருந்தன என்பதை வரலாற்ரு ஆதாரங்கள் சுட்டுகின்றன. அதை மிஷேல் ஃபூக்கோ( 1926 & 1984) என்ற ஃப்ரான்ஸ் நாட்டை சேர்ந்த சிந்தனையாளர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.  ‘ பாலியலின் வரலாறு ‘ என்னும் தனது ஆய்வு நூலில் இதை அவர் விளக்கியுள்ளார். ‘ பதினேழாம் நூற்றாண்டில் உயிர்வாழ்வின் மீதான அதிகாரம் என்பது இரண்டுவிதமான அடிப்படையான  வடிவங்களில் உருப்பெற்றது. முதலாவது அடிப்படை& உடலை ஒரு எந்திரமாகக் கணித்து அதை முறைப்படுத்தவும் அதிலிருந்து அதிக பட்சமான ஆற்றலைப் பிழிந்தெடுக்கவும், அதைப் பொருளாதார கட்டமைப்புக்குள் இருத்திவைப்பதன்வாயிலாக ஒழுங்கமைக்கவும் செய்கிறது. இரண்டாவது அடிப்படை&  உயிரியல் விதிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு உடலை அணுகியது. பிறப்பு, இறப்பு ஆகியவற்றை நிர்வகித்தல் சுகாதாரம், மருத்துவம் முதலான துறைகள் இதையட்டியே உருவாக்கப்பட்டன என்று குறிப்பிடும் மிஷேல் ஃபூக்கோ கொல்வதற்கான அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த பழைய மாதிரியிலான ஆதிக்கம் என்பது எவ்வாறு கண்காணித்தலை அடிப்படையாகக்கொண்டதாக மாறநேர்ந்தது என்பதை விளக்குகிறார். மேற்கத்திய சமூகங்களில் சில நூற்றாண்டுகளுக்குமுன்பு நடந்ததென சொல்லப்படும் இந்தப் பண்பு மாற்றம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நிகழ்ந்துவிட்டது என்பதைத்தான் நமது வரலாறு நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
சமூகம் கட்டமைக்கும் பெண்ணுடல்: 
விடுதலையின் விதைகள் உடலென்னும் குதிருக்குள்  முளைவிடக்  காத்திருக்கின்றன என்பதை கற்பிக்கவே காலம் ஏவாளை ஆப்பிளைத் தொட அனுமதித்ததுபோலும்.  உலகின் முதல் மாற்றுக் கருத்தாய், ஆப்பிளைப் பறிக்க, அவள் புத்திக்கு வினையூக்கியாய் செயல்பட்ட கடவுளுக்கும் விடுதலை குறித்த வேட்கை இருந்திருக்கவேண்டும் . தாய்வழி சமூகத்தின் ஆளுமையும் அதிகாரமும் சூறையாடப்பட்டபொழுது, அதன் சூத்திரதாரியாக ஆண்குலம் அடையாளம் காணப்பட்ட நிகழ்வு  வரலாற்றின் சிறப்பும் பழிப்பும் ஆனது.  உணவுச் சங்கிலியின் கோர்ப்புச் சூத்திரத்தில் பலாத்காரம் என்பதை உணவின்மீது குவிமையப்படுத்தியிருந்தது இயற்கை  .  ஆக்கத்தையும் அழிவையும்  கையிலெடுத்துக்கொண்ட இயற்கை, அழிவையும் உற்பத்திப் பலன்களின் பெருக்கற் குறியாய் சுமந்து கொண்டு தாய்மையின் உருக்கொண்டு  நின்றது,  ஆணும், பெண்ணும் மற்றெந்த உயிர்களும் உணவுக்காய், இருத்தலுக்காய் நிகழ்த்தும் போராட்டம் வாழ்வின் எதார்த்தமாக நிச்சயிக்கப்பட்டது .  எல்லா உடல்களும் தகவமைதலுக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ள எவ்வித எதி£ப்பையும் தெரிவிப்பதில்லை காலத்தை காலம் விழுங்கி, காலத்தை காலம் பிரசவித்தபோதும், பெண் உடல் தகவமைதலுக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டதால் மட்டுமே இன்று வரை நிலைத்து நிற்கிறது.  இல்லையென்றால் அது என்றோ கடந்து சென்ற அழிவின் படிவுகளாகி இருக்கக்கூடும்.
உடலை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறுவிதமான பொறியமைவுகளை உருவாக்கிக்கொண்ட இந்தச் சமூகம் ஆண் பெண் என இரு பாலரின் உடல்களையும் கவனத்தில்கொண்டே அதைச் செய்தது என்றபோதிலும் பெண் உடல் குறித்த கவனம் சற்றே கூடுதலாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும். அதற்குக் காரணம் பெண் உடல் குறித்த அச்சமேயாகும். உயிர்களை உற்பவிக்கும் ஆற்றல் கொண்ட பெண்ணுடல் மனிதகுலத்துக்குத் தீராத வியப்பைத் தந்துகொண்டே இருக்கிறது. அந்த வியப்பு அச்சமாக மாறியபோது பென்ணுடலின்மீதான வன்மம் பெருகத் தொடங்கியது. அதன்பொருட்டே பிரத்யேகமான தொழில்நுட்பங்கள் ஆதிக்கத்தால் கண்டறியப்பட்டன. பெண்ணை அடிமைப்படுத்த ஆயிரமாயிரம் பிரதிகளின்மூலம் கருத்தியல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அதை நம்பி ஏற்கும்படி பெண்ணும் நிர்ப்பந்திக்கப்ப்ட்டாள். ஒருபுறம்  தெய்வமாகவும் மறுபுறம் விடுபடவே முடியாத அடிமையாகவும் அவளை சமூகம் கட்டமைத்தது.
மண்ணுக்கும் பெண்ணுக்குமாய் நிகழ்த்தப்பட்ட முற்கால படையெடுப்புகளில் உடலை அழித்து உயிரைப்பிரிப்பதும், அது பெண் உடலானால் வயிற்றைக் கிழித்து உள்ளிருக்கும் சிறு உயிரை வக்கிரத்தின் கத்தி முனையில் குத்தி அழிப்பதும்  என கருவறுக்கும் மந்திரத்தை இச்சமூகத்திற்கு கையளித்திருக்கிறது சாணக்கிய சூத்திரம்.  தேசமெங்கும் வணக்கத்திற்கு உரியதாய்  வளர்ந்து நிற்கும் வரலாற்று மதில்கள் கருவறுக்கப்பட்ட உடல்களால் கட்டி எழுப்பப்பட்டவைதான்.  இதில் பெண்ணுடல் சமூகத்தின் முன் இரட்டைப் பாவசங்கீர்த்தனத்துடன் அலைகிற அவலம் மறுக்கமுடியாத உண்மையே.  தாஜ்மகால் குறித்த மறுவாசிப்பை மேற்கொண்டால் அதன் மினுமினுப்பில், அழகில், பிரம்மாண்டத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் காதலுக்கு எதிரான உண்மைகளை உணரலாம்.  தாஜ்மகால் வலியின் சின்னம். உறைந்துவிட்ட மும்தாஜ் என்னும் பெண்ணுடலின் வலிமிகுந்த வார்த்தைக் கட்டிடம் அது என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். அதுபோலத்தான் வரலாறுகள் பற்றிய மறுவாசிப்பும் நமக்குப் புதிய உண்மைகளை எடுத்துக்காட்டுகின்றன. மிகச்சிறந்த வரலாறுகள் மிகப்பெரிய வஞ்சகத்தின் கருவறை. வீடுகளும், வீட்டுக்குள் வாழ்க்கையும் உண்மை என்பதுபோல் வீடுகள்தோறும் மௌனமொழியில் கதறும் பெண் உடல்களும் உண்மையே.  பெண் உடலுக்குத் தியாகக் கிரீடம் சூட்டி அவளை ஏய்த்துக்கொண்டிருக்கிறது இச்சமூகம்.
தலித் பெண்ணுடல் :

பென்ணுடல் என்பது காமவக்ரத்தின் குதறலுக்கும், வர்க்க நொறுக்குதலுக்கும், சாதியக்கீறல்களுக்கும் உட்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். பெண்ணுடலின்மீதான் இந்த வன்முறை வெறியாட்டம் அதுவே தலித் பெண்ணுடலாக இருந்தால் இன்னும் அதிகரித்துவிடுகிறது.
பெண்மைக்கு புனிதம் போர்த்தி பூஜித்த நம் தமிழ் மரபு தான்.
    "அந்தக் கடும்பள்ளி பாசாங்கு  சக்தி கண்ணம்படைச்சி
    நைந்த இடைச்சி குறத்திக்கு மாமி நவில் வலைச்சி
    சந்தம் புழுக்கச்சி பாம்பனையோனுக்கு தங்கச்சியாம்
    இந்த பறச்சியையோ சிவ காமியென்றேத்துவது"

என்று  பெண், தெய்வம் மற்றும் புனிதம் குறித்த கற்பிதக் குவியல்களைக் கலைத்துப்போட்டு  விளையாடிப் பார்த்திருக்கிறது. இங்கு சுட்டப்பட்டிருக்கும் பாடல் அதன் நேரடியான பொருளில் புரிந்துகொள்ளப்படக்கூடாது அதை இயற்றியவர் பார்வதியைப் புகழ்ந்து பேசவே இப்படியான முறையைக் கையாண்டிருக்கிறார் என்பது உண்மைதான் எனினும் இதில் வெளிப்படும் கேலி என்பதும் இந்தப் பாடல் கிளர்த்தும் சுவாரஸ்யமும் சாதிய இழிவுகளை ஏற்றுக்கொண்ட மனத்துக்குத்தான் சாத்தியப்படும் என்னும்போது இதன் உள்நோக்கம் தெளிவுபடுகிறது. பெண் உடல் சாதியத்தின் கடத்துப் பொருளாக பயன்படுத்தப்பட்டதன் வரலாற்றுப் பின்புலம், புனிதம் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பெண் தெய்வ உடலையும் வகிர்ந்தெடுத்து சாதீய நிறமம் தேடி அலைந்திருக்கிறது என்ற துயரம்தோய்ந்த உண்மையை வெளிப்படுத்துவதைப் பார்க்கலாம்..  இடைச்சி, குறத்தி, வலைச்சி , புழுக்கச்சி, பறச்சி  என பெண் உடல் சாதீய ஓடம் சுமக்கும் சாகரமாக உணர்த்தப்பட்டதற்காக தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டும்.
பெண்களின் உரிமைகள் குறித்த பிரக்ஞையோடு செயல்பட முன்வருபவர்கள் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகளின் பிரத்யேகத் தன்மையைக் கவனத்தில் கொள்ள்வேண்டும். தேசிய குற்ற்றப் பதிவுகளின் அமைப்பு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது தலித் பெண்கள்மீதான வன்முறை அதிகரித்துவருவதைப் பார்க்கமுடிகிறது. அதிலும் தலித் சிறுமிகள் பாலியல் ரீதியான தாக்குதல்களுக்கு அதிகம் இலக்காக்கப்படுகிறார்கள். இது எதனால் நேர்கிறது என ஆராய்ந்தால் தலித் பெண்கள்மீது செலுத்தப்படும் பொருளாதார ரீதியான வன்முறையும், கருத்தியல் ரீதியான வன்முறையும் காரணங்களாகப் புலப்படும். நாம் துவக்கத்தில் மூன்றுவிதமான போராட்டங்கள் குறித்து ஆராய்ந்தோம். அந்த மூன்று விதமான போராட்டங்களும் மூன்றுவிதமான அதிகார ஒடுக்குமுறைகளை எதிர்த்து எழுவதையும் பார்த்தோம். பெண்கள் அதிலும் தலித் பெண்கள் இப்போது எந்த வகையான போராட்டங்களை முன்னெடுப்பது எனப்து நம் முன்னாலிருக்கும் கேள்வியாகும். சாதிய ஒடுக்குமுறை என்பது தன்னிலையாக்கத்தோடு தொடர்புகொண்டது. அதே நேரத்தில் பொருளாதார சுரண்டலுக்கும் அது வழிவகுக்கிறது. அது மட்டுமின்றி அடையாளத்தை அடிப்படையாகக் கொண்டு ஏவப்படும் ஆதிக்க ஒடுக்குமுறையாகவும் அது தொழிற்படுகிறது.
பெண்கள் எல்லொருக்கும் ஒரேவிதமான் ஒடுக்குமுறை இல்லை. அவர்கள் யாவரும் ஒரேவிதமான அதிகாரத்தை எதிர்கொள்ளவில்லை. அவர்களுக்கிடையே ஒத்த அமசங்கள் இருக்கலாம். அதன் அடிப்படையில் ஒரு தற்காலிகத் தோழமையும் உருவாகலாம். இன ரீதியான் ஒடுக்குதல் உக்கிரம் பெறும்போது எப்படி மற்ற முரண்பாடுகள் பின்னுக்குச் செல்கின்றனவோ அவ்வாறே சமூகத்தின் பிற பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆணாதிக்கத்தின் அதிகபட்ச தாக்குதலை சந்திக்கும்போது மட்டுப்படலாம். ஆனால் தலித் பெண்கள் எதிர்கொள்ளும் அதிகாரமும் ஒடுக்குமுறைகளும் வேறுபட்டிருப்பதால் அவர்கள் மேற்கொள்ளவேண்டிய போராட்டங்களும் வேறுப்பட்டெ இருக்கும். இது தவிர்க்க முடியாதது.  வெள்ளச் சமவெளிகளே ஆற்றின் எல்லைகள் என்பது போல் அல்லாமல் தலித் பெண்னுடலின்மீதான படையெடுப்பை எதிர்த்த போராட்டமென்பது வரலாற்றை மாற்றியெழுத வேண்டிய கட்டாயத்தையும், கால ஓட்டத்தை நிர்மூலப்படுத்தித் திணறடிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தையும் உருவாக்குகிறது. பெண்ணுடலை பலாத்காரத்தாலும், வக்கிர விளையாட்டுகளாலும் சீரழித்த, பெண்ணிய உணர்வுகளை நிராகரிப்பாலும்,அவமதிப்பாலும் , அலட்சியங்களாலும், மறுப்புகளாலும்  காயப்படுத்திய  கீழான புத்திக்கு  மிகச் சரியான பதிலைக் கொடுக்கவேண்டிய கடமை தலித் பெண்களுக்கு இருக்கிறது.  அவர்களின் போராட்டம் ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டமாக, பொருளாதார சுரண்டலுக்கு எதிரான போராட்டமாக , தன்னிலையாக்கத்தின் அடிப்படையில் செயல்படும் அதிகாரத்துக்கு எதிரான போராட்டமாக உருக்கொள்ளவேண்டும். மிகவும் சூட்சுமம் நிறைந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் அவர்கள் இருத்தப்பட்டிருப்பதால் மிகவும் விழிப்புணர்வு கொண்ட போராளிகளாக தலித் பெண்கள் இருந்தாகவேண்டும். நண்பர்களே இல்லாத இந்தப் போர்க்களத்தில் அவர்கள் கவனத்தோடும், தன்னுணர்வோடும் , உக்கிரத்தோடும் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவேண்டும். இந்த நிலையை வரலாற்றின் சாபமாகக் கருதாமல் அதன் வரமாக எடுத்துக்கொண்டால் அதிகார மேசைகளை தமக்குச் சாதகமாக மாற்றியமைப்பது அவர்களால் முடியாத ஒன்றல்ல.
 
======================================
 
குறிப்புகள் :

1. இந்த வகைப்பாடு மிஷேல் ஃபூக்கோவால் முன்வைக்கப்பட்டது. பார்க்க அவரது கட்டுரை: தன்னிலையும் அதிகாரமும் , ரவிக்குமார் ( மொ-ர்) உரையாடல் தொடர்கிறது , விடியல் பதிப்பகம், கோவை. 1995
 
2. Wendy Doniger , The Hindus- An Alternative History, Penguin , 2009 page 151- 154

3. Paul Rabinow (Ed) The Foucault Reader, Penguin Books, 1986 page 258 – 263

4. தனிப்பாடல் திரட்டு ஆசிரியர் கருப்பக்கினர் சு. அ . ராமசாமிப் புலவர் , திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் 1969
  

No comments:

Post a Comment