தமிழக அரசு ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை 2010 ஜனவரி மாதம் 21 முதல் 24 வரை நடத்துவது என முடிவு செய்துள்ளது. உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத் தக்கதே . இதற்காக முதல்வர் கலைஞரைப் பாராட்டத்தான் வேண்டும் . மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் செம்மொழிக் குழுவில் எண்பேராய உறுப்பினராக என்னையும் தமிழக அரசு நியமித்தது . அதற்கு நன்றி சொல்லச் சென்றபோது, உலகத் தமிழ் மாநாட்டை நடத்தலாம் என்ற வேண்டுகோளை முதல்வரிடம் முன்வைத்தேன் . தமிழுக்குக் கிடைத்துள்ள செம்மொழி அங்கீகாரத்தை கொண்டாடுவதாகவும், மேற்கொண்டு நாம் செய்யவேண்டிய பணிகளைத் திட்டமிடுவதாகவும் அந்த மாநாட்டை நடத்தலாம் என நான் சொன்னபோது " என்ன வேலை செய்வது என்பதை மாநாடு போட்டு முடிவு செய்வதைவிடவும் ஏதாவது சிலவற்றைச் செய்துவிட்டுப் பிறகு மாநாடு போடலாம்" என முதல்வர் அவர்கள் சொன்னார்கள். அதை அங்கிருந்த கவிஞர் வைரமுத்து முதலானவர்களும் ஆமோதித்தனர். இப்போது எனது கோரிக்கை நிறைவேறியிருக்கிறது . அதை எண்ணி மகிழ்கிறேன்.
உலக அளவில் தமிழினம் இந்த அளவுக்கு வேறெப்போதும் பலவீனப்பட்டுப் போயிருக்காது என்று கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது. ஈழத் தமிழர்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி வதை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர். இலங்கையில் மட்டுமின்றி தமிழ்கத்திலும் சுமார் ஒரு லட்சம் பேர் முகாம்களில் வாடுகின்றனர். இனி தமிழர் எனச் சொல்லிக்கொள்வதுகூட குற்றமாக வர்ணிக்கப்படலாம் என்ற நிலை. அப்படியானதொரு சூழலில் இந்த மாநாடு நடக்கவுள்ளது.
தமிழினத்தின் நிலை இதுவென்றால் தமிழகத்தின் நிலையோ இன்னும் மோசம். தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்கவேண்டும் என்ற கோரிக்கை நாற்பது ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகத் தமிழை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. மாநில உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன. இவற்றையெல்லாம் இன்றைய இளைய தலைமுறை அறிந்திருக்கவில்லை. இந்த மாநாடு அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்.
இந்த மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை மட்டுமே போதாது. தமிழர் ஒவ்வொருவரும் இதில் பங்களிப்புச் செய்யவேண்டும் . அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ . நான் தினமும் இதில் எனது கருத்துகளையும் வேறு பலரது எண்ணங்களையும் பதிவு செய்யவிருக்கிறேன். கடந்த மாநாடுகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் சிலவும் இதில் இடம்பெறும். இப்போது நடக்கவிருக்கும் ஒன்பதாவது மாநாடு பயனுள்ளதாய் அமைய என்னென்ன செய்யலாம் என்பதையும் நாம் இங்கே விவாதிக்கலாம்.
மொழியைக் கொண்டாடுவோம் . மொழியை வளர்ப்போம்.
No comments:
Post a Comment