Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Saturday, September 19, 2009

அண்ணா நடத்திய மாநாடு

இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு அண்ணா முதல்வராக இருந்தபோது 1968 ஆம் ஆண்டு சனவரி மாதம் மூன்றாம் தேதியிலிருந்து பத்தாம் தேதிவரை சென்னையில் ஒரு வாரம் நடந்தது . பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஐநூறு தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். ஒன்பது அரங்குகள் அமைக்கப்பட்டு அவற்றில் முப்பத்தாறு குழுக்களாக அறிஞர்கள் பங்கேற்றுப் பல்வேறுத் தலைப்புகளில் கட்டுரைகளைச் சமர்ப்பித்து விவாதித்தனர். தமிழ் அமர்வு ஒன்று மு. வ தலைமையில் நடைபெற்றது. மற்றவை தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நடந்தன.
பொதுமக்கள் பங்கேற்கும் விதமாக விழாவும் நடத்தப்பட்டது. அதை அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் துவக்கி வைத்தார் . சென்னை மெரீனா கடற்கரையில் நாம் இப்போது பார்க்கிற தமிழ் அறிஞர் சிலைகள் அப்போது வைக்கப்பட்டவைதான் . பத்துத் தமிழ் அறிஞர்களின் சிலைகள் அப்போது நிறுவப்பட்டன.
அண்ணா முதல்வராக இருந்தாலும் அந்த மாநாடு சிறப்புற நடப்பதற்கு உழைத்தவர் இன்றைய முதல்வர் கலைஞர்தான். ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்றிருக்கும் கலைஞர் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த முன்வந்திருப்பது பாராட்டத் தக்கதாகும்.

IATR என்ன செய்கிறது?

உலகத் தமிழ் மாநாட்டை நடத்தவேண்டுமென்றால் அதற்கென இருக்கும் IATR அமைப்புடன் இணைந்து திட்டமிடவேண்டும். அதன் தலைவர் பொறுப்பில் முன்பு நொபுரு கரஷிமா இருந்தார். துணைத் தலைவராக பிரான்சுவா குரோ இருந்தார். இப்போதும் அவர்கள்தான் இருக்கிறார்களா? நானும் இன்று பல நண்பர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன் . எவருக்கும் தெரியவில்லை. அந்த அமைப்பு என்ன செய்கிறது? யாருக்காவது தெரியுமா?